December 16, 2019
கோவையில் ஆத்துப்பாலம் பகுதியில் கேம்பஸ் ப்ராண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் இயக்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உருவபொம்மை மற்றும் நகல் எரிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
(சிஏபி) குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், நேற்று டெல்லியில் ஜமியா மற்றும் உபி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்தும், பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதனை தொடர்ந்து திருத்தப்பட்ட சட்ட மசோதா நகலை எரித்தனர்.
போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மோடி அமித்ஷா உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து உருவபொம்மையை எரிப்பதை தடுக்க முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் உருவபொம்மை கொழுந்து விட்டு எரிந்தது. அதன் பின்னர் அருகில் உள்ள கடையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து நெருப்பை அணைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது ஒரு சிலரை தரதரவென இழுத்து வந்து வாகனத்தில் ஏற்றினர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.