January 4, 2020
தண்டோரா குழு
கோவையில் குழந்தை ஆபாச படம் பார்த்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ரென்டா பாசுமாடரி என்பரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சமூக ஊடகப்பிரிவில் சமூக வலைத்தளங்களை கண்காணித்த போது ரெண்டா பாசுமாடரி (23) என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இவர்
பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்து மூலமான புகார் அளிக்கப்பட்டது.
அப்புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவருடைய செல்போனை ஆய்வு செய்த போது அதில் சிறார்களின் ஆபாச படங்கள் உட்பட பல ஆபாச படங்கள் உள்ளது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்ததில், அவரது சொந்த ஊர் அசாம் என்றும் இங்கே தங்கி வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், தனக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும் அதை பதிவிறக்கம் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்ததும் தனது நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசஞ்சர் மூலமாக அனுப்பி வைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது போன்ற குழந்தைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் மேற்படி நபர்களும் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கோவை மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் எச்சரித்துள்ளார்.