April 18, 2020
தண்டோரா குழு
கோவையில் காவல்துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினருடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காவல் துறையினருடன் இணைந்து ஊர்காவல் படையினர் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இப்படியிருக்க தமிழக காவல்துறை சார்பில் விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த அழைப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முன்னாள் ராணுவ வீரர்கள் 5 ஆயிரம் பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 12 முன்னாள் ராணுவ வீரர்களும், மாவட்ட காவல் எல்லையான புறநகர் பகுதிகளில் 42 முன்னாள் ராணுவ வீரர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.