June 1, 2021
தண்டோரா குழு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவை வந்து, மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் ஒருபகுதியாக, கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல வசதியாக சிறப்பு கார் ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை அவர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த திட்டத்தில் மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு தலா 10 கார்கள் வீதம் 5 மண்டலத்துக்கு 50 கார்கள் துவங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் தொடர்பு எண்ணை அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒதுக்கப்பட்ட கார்கள் அந்தந்த மண்டல சுகாதார ஆய்வாளர் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக அதிக தேவையுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்ந்த இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாக வாடகை அடிப்படையில் பெறப்பட்டு, மக்களின் இலவச சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிர தாக்கம் குறையும் வரை மக்களுக்கான செயல்பாட்டில் இருக்கும். கார் ஆம்புலன்ஸ் வாகனங்களை 0422 – 2302323, 9750554321, 9865020999 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், ‘என்றார்.