January 18, 2021
தண்டோரா குழு
கோவையில் களைகட்டிய கொங்குநாட்டு ஸ்டார்ட் அப் பொங்கல்.கொங்கு மண்டலத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாரம்பரிய விளையாட்டுகள் ஆடி மகிழ்ந்தனர்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த கோவை, ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி கொங்குநாட்டு ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ விழா கோவை பீளமேடு பகுதியில் உள்ள க்ளஸ்டர் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது. கோவையில் முதன் முறையாக நடைபெற்ற இதில், நகர வாழ்க்கையில் பழகி போன குடும்பத்தினர்கள் இணைந்து கிராம சூழலில் கரும்பு வைத்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல்,உரியடி பாண்டி,நொண்டி, கபடி ஆகிய போட்டிகளில் தொழில் முனைவோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஸ்டார்ட் அப் பயணம் நவீன் கிருஷ்ணா கூறுகையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனர்களை ஒருங்கினைக்கும் திருவிழாவாக இந்த பொங்கல் விழா உள்ளதாகவும்,இதில் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளவும் தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் இது போன்ற விழாக்கள் ஏதுவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
விழாவில் இறுதியாக,அனைவருக்கும் தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது.