November 19, 2019 தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி அக்கல்லூரி வளாகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சினேகா (19). இவர் இன்று காலை தனது கல்லூரி அருகே திடீரென உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கல்லூரி மாணவியை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால் தீயானது உடம்பில் வேகமாக பரவியதையடுத்து பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர்.
இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மாணவியை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தகவலறிந்து வந்த உறவினர்கள், மாணவியை அரசு மருத்துவமனையில் இருந்து மாற்றி சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணவிக்கு உடல் முழுவதும் தீயானது 90% வரை பரவியுள்ளதால் மாணவி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.