December 10, 2019
கணபதி அடுத்துள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள அத்திப்பாளையம் ரோட்டில் தனியார் பேக்கரி முன்பு இரண்டு நபர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்டனர்.
அவர்களிடம் சுமார் 3 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.அவற்றை கைப்பற்றி அவர்களை விசாரிக்கையில் கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் மகன் பிரகாஷ் (எ) கைகாட்டி பிரகாஷ் ( வயது51) என்றும் டிரைவர் என்பதும் தெரியவந்தது. மற்றொரு நபர் கோவை சிவானந்தாகாலனியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் சதீஸ்குமார்(33) என்பதும் வெல்டர் வேலை செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.
சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கும் ,அப்பகுதி தொழிலாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ய வந்ததாக தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.