May 29, 2021
தண்டோரா குழு
கோவையில் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்று குறைய தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்ற உறுதி செய்யப்படுகிறது.மேலும் கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டம்தான் தமிழக அளவில் தொற்று பாதிப்பில் முதலிடம் உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் ஒரு வீதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த வீதியை தனிமைப்படுத்தி வருகிறோம். இதன்படி 600 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மாநகராட்சியில் தொற்றை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்வதுடன், பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை கண்டறியும் பணியில் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட அதிகம். இவர்களில் ஒரு நபர் குறைந்தது 50 வீடுகளில் சோதனை மேற்கொள்வார்.சளி,காய்ச்சல் உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும்.இதன்முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள்,14 நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று தெரிவித்து உள்ளோம்.அவர்களை கண்காணிக்கும் பணியில் மநாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை 6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொற்று அதிகரித்து உள்ளது போல் தெரிகிறது. மாநகராட்சி நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக கோவையில் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்று குறைய தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.