March 4, 2020
கோவையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு முகமூடி திருடர்கள் 60 சவரண் நகை கொள்ளையடிக்கப் பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சுங்கம் பாரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரான்ஸ் ரொசாரியோ. 60 வயதான ஒய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மனைவி எலிசபெத் மேரியுடன் வசித்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் 4 பேர் முகமூடி மற்றும் கையுறை அணிந்து வந்து, முன்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்துள்ளனர். தரைதளத்தில் தூங்கிக்கொண்டிருந்த பிரான்ஸ் ரொசாரியோ மற்றும் எலிசபெத் மேரி இருவரையும் கட்டி போட்டு விட்டு, பீரோவில் இருந்த 60 சவரண் நகை மற்றும் ஒரு இலட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பிரான்ஸ் ரொசாரியோ அளித்த புகாரின் பேரில், இராமநாதபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.