March 1, 2021
தண்டோரா குழு
இன்று முதல் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவுள்ள நிலையில் கோவையில் விருப்பமுள்ள முதியவர்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கியது.இதனை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் வருவாய்,காவலர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் 60 வயதிற்கு மேலுள்ளவர்கள் மார்ச் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 60 வயதிற்கு மேலுள்ளவர்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய தேதி, இடம் ஆகியவற்றை பயனாளிகளே தேர்வு செய்துகொள்ளலாம்.
60 வயதிற்கு மேலுள்ளவர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்பட ஏதேனும் ஒரு ஆவணத்தை வைத்து பதிவு செய்துகொள்ள முடியும். அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் பொது மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்,” என்றனர்.