December 18, 2019
கோவையில் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை பாரதியார் பல்கலைகழக 36வது பட்டமளிப்பு விழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த விழாவில் கவர்னர் பங்கேற்க வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு முன் ஓன்று கூடிய பல்கலை கழக மாணவர்கள் குடியுரிமை சட்ட திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
பாரதியார் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்ததால் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை கைது செய்ய முயன்றனர்.ஆனால் கைதுக்கு உடன்படாமல் மாணவ, மாணவிகள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.இந்த மசோதா மக்களை பிளவு படுத்தும் விதமாக இருப்பதாகவும் இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.
மத்திய அரசின் கவனத்திற்கு கோரிக்கைகள் செல்ல வேண்டும் என்பதற்காக கவர்னர்வருகையின் போது இந்தபோராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 40 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.கவர்னர் வருகைக்கு சில நிமிடங்கள் முன்பாக விழா அரங்கு முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.