January 31, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட இரு ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை வகுப்பிற்கு செல்ல மாட்டோம் என மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த ஒன்பது தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டமானது தற்க்காலிகமாக திரும்பப்பெறப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வழக்கம்போல திரும்பியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட தேதிக்குள் பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவுறுத்திய நிலையில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியர் சரவணகுமார் மற்றும் கணித ஆசிரியர் தமிழ்செல்வன் ஆகிய இருவர் குறிப்பிட்ட தேதிக்குள் பள்ளிக்கு செல்லாததால் இருவரும் வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து இன்று காலை முதல் பள்ளியில் படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் சரவணகுமார் மற்றும் தமிழ்செல்வன் ஆகிய இருவரும் இதே பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அது வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,
ஆசிரியர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருவதாகவும் அவர்கள் பாடங்களை நன்றாக சொல்லி கொடுப்பார்கள் என தெரிவித்துள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வேறு ஆசிரியர்கள் வேண்டாம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆசிரியர்களும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை மாணவர்களை சமரசபடுத்தியும் எவ்வித பயனும் அளிக்காத நிலையில் இரு ஆசிரியர்களும் மீண்டும் கண்ணம்பாளையம் பள்ளியில் சேர்க்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.