June 18, 2018
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியராக இருந்த ஷுஜாத் புகாரி கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்ற போது,அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.இந்த தாக்குதலில் ஷுஜாத் புகாரி,அவரது பாதுகாவலர்கள் இருவரும் உயிரிழந்தனர்.இதற்கு அம்மாநில அரசு,மத்திய அரசு,அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில்,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கோவை அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஷுஜாத் புகாரிக்கு அஞ்சலி செலுத்தினர்.அப்போது,கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சியில் நடைபெறும் இதுபோன்ற படுகொலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன்,மதத்திற்காக தான் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக்காட்டிய பத்திரிக்கையாளர்கள்,மதம்,நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வெளிக்கொண்டு வருவது என பல்வேறு வழிகளிலும் செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் வருவதாக தெரிவித்தனர்.
மேலும்,ஷுஜாத் புகாரிக்கு பல ஆண்டுகளாக அச்சுறுத்தும் இருந்தும் மாநில அரசு பாதுகாப்பு வழங்காததும் உயிரிழப்பு நடந்ததற்கு காரணம் என்று குற்றச்சாட்டிய பத்திரிக்கையாளர்கள், 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.