June 13, 2018
தண்டோரா குழு
கோவையில் விட்டு விட்டு பெய்யும் மழையால் செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளான சின்ன தடாகம்,கணுவாய்,வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது.தினசரி சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தடாகம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.கோவையில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் செங்கல் உற்பத்திக்காக இருப்பு வைக்கப்பட்ட மண் முழுவதும் சகதியாக மாறியுள்ளதால் செங்கல் உற்பத்தி முற்றிலுமாக முடங்கி உள்ளது.
உற்பத்தி முடங்கி உள்ளதால் செங்கல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது.உற்பத்தி நிறுத்தத்தால் இந்த தொழிலை நம்பியுள்ள செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.