May 14, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று கோவை வந்தடைந்தனர்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தக்தே புயலாக நாளை உருவெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட்’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 54 பேர் கொண்ட 2 பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் பேருந்து மூலம் கோவை வரவழைக்கப்பட்டனர். கோவை வந்த பேரிடர் மீட்பு குழுவினர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.