March 4, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவிற்கு பொறியியல் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் ரவி சேஹல் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 9 வது சர்வதேச பொறியியல் செயலாக்க கண்காட்சி இன்று துவங்கியது. அமைச்சர்கள் சம்பத் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் இந்த கண்காட்சியை துவக்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சி துவக்க விழாவிற்கு பின் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் ரவி சேஹல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
இந்த சர்வதேச பொறியியல் கண்காட்சியில் 50 முதல் 60 தொழில் துறையினர் சீனாவிலிருந்து வர இருந்ததாகவும், கொரோனா பாதிப்பால் இந்திய அரசு மறுத்ததனால், அந்த நாட்டிலிருந்து அந்த தொழில் முனைவோர் வரவில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் இந்த கண்காட்சிக்கு 47 நாடுகளிலிருந்து வரும் பங்கேற்பாளர்கள் டெல்லி, மும்பை, சென்னை ஆகிய விமான நிலையங்களில் சோதனை முறையாக கொரோனா சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் , அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.எம்.எஸ்.எம்.இ துறையில் போட்டியிட வேண்டும் என்றால், இந்தியாவில் மூலப்பொருட்கள் விலை, வங்கி விகிதமும் அதிகமாக இருப்பதை குறைக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்றுமதியில் வாங்குபவர்கள் மத்தியில் அச்சம் உள்ளது எனவும் ,அதே வேளையில்
தற்போது இந்தியாவிற்கு தொழில்துறையில் சாதகமான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.பொறியியல் துறையில் 80% சீனா, 10-15% இந்தியா என்ற நிலை இருந்த நிலையில், தற்போது கொரோனாவால் இந்தியாவிற்கு பொறியியல் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் உட்கட்டமைப்பு துறையில் குறிப்பாக இந்தியாவில் கோவைக்கு அதிக வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளை ஒன்றினைக்க ஆட்கள் இல்லை எனவும், சீனாவிலிருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் வர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் எனவும், இந்த நிலைமை, ஏப்ரல்-ஜூன் மாதத்தில் சீராகும் என்று எதிர்ப்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.