July 9, 2018 தண்டோரா குழு
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட சமூக நல பாதுகாப்புத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உளவியல் மற்றும் உடல் ரீதியாகவும் மற்றும் பாலியல் வன்கொடுமையாலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் பாதிக்கப்பட்டால் குடும்ப கெளரவம்,அறியாமை காரணமாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை.இதனால் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுகின்ற சூழல் உருவாகியுள்ளது.
குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்களுக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது.இச்சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடம்,தங்களை தாங்களே பாதுகாப்பது,குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து நாடகம்,பாட்டு,இசை நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கின்றனர்.