December 19, 2019
கோவை அவிநாசி சாலையில் வஊசி மைதானம் எதிர்ப்புறம் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் குடியுரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் இயக்கங்கள் பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” “இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை உடைக்காதே” “மதசார்பின்மையை உடைக்காதே” என கோசங்களை மாணவிகள் எழுப்பினர். அகதிகளாக வருபவர்களை புறக்கணிப்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் மதத்தின் அடிப்படையில் வரும் பிரிவினையை ஏற்று கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.