December 16, 2019
தண்டோரா குழு
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வரும் 20ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வரும் 20ஆம் தேதி முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுப்பதாக கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாம் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை இயற்றி வருகிறது மக்களை எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய சட்டங்கள் இயக்கப்பட்டு வருகின்றன பொருளாதார வீழ்ச்சியில் மறைப்பதற்கு இந்தமாதிரியான சிந்தனை கொண்டு வரப்படுகின்றன. முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து பாசிச விரோத போக்கை இந்த அரசு கடைபிடித்து வருகிறது மேலும் இலங்கை தமிழர்கள் குறித்து மசோதாவில் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கோவையில் வரும் 20ஆம் தேதி எங்கள் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு நடத்தப்பட உள்ளது.
மொத்த வியாபாரிகள், மீன் வியாபாரிகள், தங்க நகை உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த முழு அடைப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் இதனைத்தொடர்ந்து ஆத்துப்பாலத்தில் மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.