December 11, 2019
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.எப்.ஐ அமைப்பை சேர்ந்த கோவை அரசுகலைக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய மசோதாவின் படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் வரும் முஸ்லீம் அல்லாத மக்கள் இந்தியாவில் 6 ஆண்டுகள் வாழ்ந்தால் குடியுரிமை வழங்க்ப்படும் என்றும், முஸ்லீம்களுக்கு இந்த குடியுரிமை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வரும் மக்களைப் பற்றி இந்த மசோதா எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி எஸ்.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 20 பேர் கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மத்திய அரசின் இந்த புதிய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து எஸ்எப்ஐ கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில்,
” இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திட்டமிட்டுப் முஸ்லிம் மக்களை புறக்கணித்து அதற்காக இந்த சட்டம் தற்போது கொண்டு வரப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனநாயக முறையில் போராடும் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் இது கண்டனத்துக்கு உரியது.” என்றார்.