June 10, 2019
தண்டோரா குழு
பிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகனுக்கு இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம்2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கிரேசி மோகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
‘கிரேஸி’ என்பது அவருக்கு பொருந்தாத பட்டம்; மோகன் ஒரு ‘நகைச்சுவை ஞானி’ தன்னுடைய திறமைகளை குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாக தன்னைக் காட்டிக்கொண்டார் எனக் கூறியுள்ளார்.
கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.