June 2, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காரமடை இரவு நேர காய்கறி மார்கெட், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் ஆகிய
மார்க்கெட்டுகளுகளை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைப்பொருட்கள் விற்பனை தடையின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைபொருட்கள் சேகரிப்பு மற்றும் பிரித்தனுப்பும் மையங்கள் செயல்பட்டு வருகின்றது.
அதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை பகுதியில் செயல்பட்டு வந்த இரவு நேர காய்கறி சந்தையானது, தற்போது சிக்கதாசம்பாளையம் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறைக்கு சொந்தமான காய்கறி வணிகவளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இரவு 10 மணி முதல் அதிகாலை 3 வரையில் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கு சந்தைப்படுத்தப்படும் தக்காளி, கத்திரி, வெண்டை, கீரை, மிளகாய், கருவேப்பிலை, முருங்கை, கொத்தவரை போன்ற காய்கறிகளை ஊட்டியில் இருந்து வியாபாரிகள் வந்து நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து மினி வேன், ஆட்டோ, மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்டவற்றின் மூலம் நீலகிரி மாவட்டதில் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் ஊட்டியிலிருந்து வரும் கேரட், உருளை, பீன்ஸ், முட்டைகோசு, காலிபிளவர், பட்டாணி, நூல்கோல்,போன்ற காய்கறிகள் இங்கு வரப்பெற்று இங்கிருந்து கோவை மாநகராட்சிக்கும் பிற வட்டார சந்தைகளுக்கும், ஒட்டன்சத்திரம், சேலம் போன்ற பிற மாவட்ட சந்தைகளுக்கும் மற்றும் கேரளாவிற்கும் காய்கறிகள் மொத்தமாக அனுப்பப்பட்டு வருகிறது.இதனால் விளைபொருட்களை வீணாகாமல் சந்தைப்படுத்துவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதைபோன்று பொள்ளாச்சியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இங்கு உள்ள விவசாயிகள் பிற மாவட்டத்தில் இருந்து வரும் தக்காளி, கத்திரி, வெண்டை, பப்பாளி, முலாம்பழம் போன்ற காய்கறிகளும் ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து வரும் காய்கறிகளும் மொத்தமாக வியாபாரிகள் பெற்று பிற மாவட்ட பகுதிகளுக்கும் கேரளாவிற்கும் விற்பனை செய்து வருகிறார்கள். பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த வெங்காய மார்க்கெட் வழக்கம்போல் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது.
இங்கிருந்து சின்னவெங்காயம், பெரிய வெங்காயம் போன்றவை கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த உழவர் சந்தை மூடபப் ட்டதால் ஊஞ்சவேலாம்பட்டி மைதானத்தில் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் விளைபொருட்களை சேகரம் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
பிற மாவட்டங்களிருந்து வரும் காய்கறிகள் ஆனைமலை வட்டாரம் – கோபாலபுரம் மற்றும் மீனாட்சிபுரம் செக்போஸ்ட வழியாகவும், பொள்ளாச்சி வட்டாரம் நடுப்புணி மற்றும் செம்மனம்பதி செக்போஸ்ட வழியாகவும், மதுக்கரை வட்டாரம் வாழையாறு மற்றும் வேலந்தாவளம் செக்போஸ்ட் வழியாகவும் கேரளாவிற்கு தங்கு தடையின்றி கொண்டு செல்லப்படுகிறது என தெரிவித்துள்ளார்.