May 25, 2019
தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் என கட்சி செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
17 வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே அக்கட்சி வென்றது. இதுமட்டுமின்றி காங்கிரஸின் கோட்டையான அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி குறித்தும் மக்களிடையே எந்த விஷயங்களை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.