June 30, 2021
தண்டோரா குழு
கோவையில் கல்பனா சாவ்லா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சின்னாம்பதியை சேர்ந்த இளம்பெண் சந்தியாவை மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார் சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சந்தியா.அந்த கிராமத்திலேயே முதல் பட்டதாரியான இளம்பெண் சந்தியா, கொரோனா கால ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த பகுதி மாணவ,மாணவிகளுக்கு இணையதளம் ஆன்லைன் போன்ற வசதிகள் இல்லாததால் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு சந்தியா சிறப்பு வகுப்புகளை எடுக்க துவங்கிய சந்தியா, பள்ளி செயல்படுவது போலவே, காலை 8 முதல் 12 மற்றும் மாலை 3 முதல் 6 மணி வரை சிறப்பு வகுப்புகளை எடுத்து வந்தார்.
இந்நிலையில் இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் நேரில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து இளம்பெண் சந்தியா கல்பனாசாவ்லா விருது பெற பரிந்துரைக்கபடுவார் என தகவல் வந்ததை தொடர்ந்து, மதுக்கரை ஒன்றியம் மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார் சந்தியாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.