August 8, 2018
தண்டோரா குழு
கருணாநிதி உடலை வைக்ககூடிய சந்தனப்பேழையில் அவர் விரும்பிய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது கைப்பட எழுதிய கண்ணீர் அஞ்சலி மடல் ஒன்றை நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். அதில், ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டுள்ளான் என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டுமென்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி கருணாநிதி உடலை வைக்ககூடிய சந்தனப்பேழையில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக்கொண்டுள்ளான் என்ற அவர் விரும்பிய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.