December 9, 2019
தண்டோரா குழு
கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகினார்.
கர்நாடகாவில் காலியாகவுள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் 66.49 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கிடையில், கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜகவுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் இந்த தேர்தலில் பாஜக 6 முதல் 8 இடங்களில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி கவிழுமா? என கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக 10 இடங்களில் வென்றுள்ளது. மேலும் 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஒரு தொகுதியில் சுயேச்சை ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகினார்.
‘‘ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். மக்கள் முடிவை ஏற்கிறேன். கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பவுள்ளேன்’’ என்று சித்தராமையா கூறியுள்ளார்.