May 18, 2018
தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு பீகார்,கோவா, மணிப்பூரில் அந்தந்த மாநிலங்களின் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆளுநர்களை சந்தித்து வலியுறுத்தினர்.
கர்நாடகாவில் 104 இடங்களை வென்ற பாஜக தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.இதற்கு கர்நாடகாவில் பெரும்பான்மையாக காங்கிரஸ் – மஜத கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில்,கர்நாடக ஆளுநர் செய்த அதே விதிமுறையை பயன்படுத்தி மற்ற மாநிலங்களில் அதிக இடங்களில் வென்ற கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ளது.
பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தலைமையில்,கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆளுநர் சத்யபால் மாலிக்கை இன்று சந்தித்தனர்.அப்போது, நாங்கள் தான் இந்த மாநிலத்தில் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சி என்று கூறி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல,கோவாவில் 13 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று,தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மேலும்,மணிப்பூரிலும் காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் இக்ரம் இபோபி சிங் ஆளுநர் ஜகதீஷ் முக்கி-யை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.இந்த தொடர் அரசியல் அதிரடி திருப்பங்கள் இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.