March 6, 2020
உலக குளுக்கோமா (கண் அழுத்த நோய்) வாரத்தை முன்னிட்டு தி ஐ பவுண்டேசன் மருத்துவமனையில் இலவச பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
உலக அளவில் 60.5 மில்லியன் மக்களுக்கு கண் அழுத்த நோய் (குளுக்கோமா) உள்ளது. இந்த நோய் காரணமாக 12 மில்லியன் மக்கள் பார்வையை இழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 11.2 மில்லியன் மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தி ஐ பவுண்டேசன் மருத்துவமனையில் நடைபெற்றது.
அப்போது, மருத்துவமனையின் தலைவர் ராம மூர்த்தி, மருத்துவமனை இயக்குநர் சித்ராராம மூர்த்தி, மருத்துவர் முரளிதர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
குளுக்கோமா குறித்த போதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை. இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை மழுங்கடித்து முழு பார்வையையும் பறிக்கும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக கண்டுபிடிக்க முடியாது, கண் அழுத்த நோயை மருத்துவமனைகளில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும். ஆனால், இழந்த பார்வையை சிகிச்சை மூலம் மீட்க முடியாது. எங்கள் மருத்துவமனையில் குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இலவச கம் அழுத்த நோய் பரிசோதனை வழங்க உள்ளோம். இந்த சலுகை தி ஐ பவுண்டேசனின் அனைத்து கிளைகளிலும் மார் 8-14ம் தேதி வரை கிடைக்கு.
இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.