March 12, 2026
தண்டோரா குழு
தமிழக விவசாயிகள் கடும் வெயிலிலும் கவலையின்றி விவசாயம் செய்ய ‘நியூ ஹாலண்ட்’ நிறுவனம்,அதிக குதிரைத்திறன் கொண்ட தனது டிராக்டர்கள் வரிசையில் புதிதாக, ஏசி கேபினுடன் கூடிய ‘ஒர்க்மாஸ்டர் 105’ டிராக்டரை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
106 எச்பி திறன் கொண்ட இந்த புதிய டிராக்டர், கடினமான விவசாய நிலங்களிலும் அனைத்துக் காலநிலைகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது வசதி, உழைப்பு மற்றும் உற்பத்தியில் புதிய இலக்கினை நிர்ணயித்துள்ளது. இந்த ஒர்க்மாஸ்டர் 105 டிராக்டர், 106 எச்பி திறன் மற்றும் 3.4 லிட்டர் இன்ஜினுடன் இயங்குகிறது.
இது குறைந்த இன்ஜின் சுழற்சியில் சிறப்பான செயல்பாட்டையும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் தருகிறது. இந்த புதிய மாடலின் ஏசி கேபினின் மேற்கூரையில் ஆறு வென்ட்கள் உள்ளதால், எந்தப் பருவநிலையிலும் ஓட்டுநருக்குக் குளிர்ச்சியான மற்றும் வெப்பமான வசதியை அளிக்கிறது. மேலும் சத்தம் இல்லாத சூழல், ஓட்டுநர் சோர்வடையாமல் இருக்க ஏர் சஸ்பென்ஷன் கொண்ட சீட் போன்ற வசதிகளும் உள்ளன. இதில் உள்ள சிறப்பான பேன் அமைப்பு நெல் அறுவடைக்குப் பிறகு வரும் தூசியான சூழ்நிலைகளிலும் தடையின்றி வேலை செய்ய உதவுகிறது.
இந்த அறிமுகம் குறித்து நியூ ஹாலண்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் இந்திய விற்பனைப் பிரிவு இயக்குனர் சந்தீப் குப்தா கூறுகையில்,
“விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இங்குள்ள விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்க நவீன தொழில்நுட்பங்களை அதிகம் விரும்புகிறார்கள். வலுவான டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, எங்கள் வளர்ச்சியில் மிக முக்கிய மாநிலம் ஆகும். கடினமான மற்றும் நீண்ட நேர விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், அதே நேரத்தில் ஓட்டுநருக்கு எந்தக் காலநிலையிலும் சிறந்த வசதியை வழங்குவதற்காகவும் இந்த ஏசி கேபினுடன் கூடிய ஒர்க்மாஸ்டர் 105 பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
உலக அளவில் ‘மேக் இன் இந்தியா’ மாடலாக வெற்றி பெற்ற ஒர்க்மாஸ்டர் 105, கடந்த ஆண்டு இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது ஏசி கேபின் வசதியுடன் வெளிவந்துள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒர்க்மாஸ்டர் சீரிஸ் டிராக்டர்கள் ஏற்கனவே இந்தியாவிலும் உலக அளவிலும் விற்பனையாகிச் சாதனை படைத்துள்ளன. இதில் 20 பார்வேர்டு மற்றும் 20 ரிவர்ஸ் கியர்களுடன் கூடிய பவர் ஷட்டில் வசதி உள்ளது. மேலும் 3,500 கிலோ எடையைத் தூக்கும் திறன் உள்ளதால், கனமான விவசாயக் கருவிகளை எளிதாகக் கையாள முடியும். ஏசி கேபின் அதிக வெப்பம் மற்றும் குளிரில் இருந்து ஓட்டுநரைப் பாதுகாக்கிறது. உருளைக்கிழங்கு நடுதல் உள்ளிட்ட கடினமான பணிகளில் தொடர்ச்சியாக வேலை செய்தாலும், இதன் ‘வெட் கிளட்ச்’ மற்றும் இதர அமைப்புகள் அதிக உழைப்பைக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஒர்க்மாஸ்டர் 105, தற்போது ஏசி கேபின் அறிமுகத்தின் மூலம் இந்தியாவிலும் மிகுந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.