December 27, 2021
தண்டோரா குழு
கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிங்காநல்லூர் போலீசார் நேற்று அப்பகுதிகளில் ரோந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் தரணிதரன்(19), சூர்யாநகரை சேர்ந்த சாம்(20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500கிராம் கஞ்சா, ரூ.2,300 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.