November 24, 2018
தண்டோரா குழு
கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஏற்பட்ட குப்பைகள், சேர் மற்றும் சகதிகளை அகற்றி சுத்தம் செய்ய தூய்மை குழுக்களை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி,திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. புயல் தாக்கி ஒரு வாரம் ஆனா நிலையில் தற்போதும் மீட்பு பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.புயல் பாதித்த பகுதிகளில் மிகவும் குப்பைகள், சேர் மற்றும் சகதிகளாக உள்ளன மேலும் கடல்நீர் உட்புகுந்ததால் இவற்றினை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பணியினை துரிதப்படுத்த முதலமைச்சர் பழனிசாமி குழுவை அமைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
புயல் மற்றும் மழையின் காரணமாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள், மழை வெள்ளம் மற்றும் கடல்நீர் உட்புகுந்ததால் உண்டான சேர், சகதி இவற்றினை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டு, பிற மாவட்டங்களிலிருந்து ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்கள் தலைமையில் தூய்மைக் குழுக்களை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இக்குழு, பாதிக்கப்பட்ட கிராமங்கள் வாரியாக, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், ஒவ்வொரு குழுவிலும் 200 தூய்மைப் பணியாளர்களை பிறமாவட்டங்களிலிருந்து அழைத்துச் செல்லவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் இக்குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று முகாமிட்டு, குப்பைகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் சேர், சகதி போன்றவற்றினை துரிதமாக அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.
இவர்களுக்கான உணவு மற்றும் இருப்பிட வசதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளேன், என அவர் தெரிவித்துள்ளார்.