February 19, 2019 தண்டோரா குழு
ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணன் ரெட்டி மீது 1998-ல் பேருந்து மீது கல்வீசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என ஜனவரி 7-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டது.
இதையடுத்து, பாலகிருஷ்ணன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதற்கிடையில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் மேல் முறையீடு செய்ய மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி அமைச்சர் மேல் முறையீடு செய்வதற்காக அவரது சிறை
தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனை அடுத்து, பாலகிருஷ்ணா ரெட்டி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுவிட்டது.
இதனை தொடர்ந்து பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு மிதன விசாரணை நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய்கண்ணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஆஜராகி, பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணரெட்டி 72வது குற்றவாளி ஆவார். யாரோ செய்த தவறுக்கு, இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதாடினார். அதற்கு நீதிபதிகள், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரங்களை பரிசீலித்துதான், அந்த தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளது. எனவே, நீதிமன்ற வழங்கிய தண்டனைக்கு நாங்களும் தடை விதிக்க முடியாது எனவும். மேலும் இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறோம் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதனையேடுத்து ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓசூர் தொகுதி உள்பட தற்போது தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளது.