December 21, 2019
தண்டோரா குழு
வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ அனைவரும் ஒரு மரமாவது நட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஒற்றை காலுடன் சைக்கிளில் தமிழகம் முழுவதும் ஒருவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் முதுகலை பட்டமும், ஆசிரியர் பயிற்சியும் முடித்துவிட்டு அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற தந்தையின் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறார். சமூகத்தில் மக்களிடையே மாற்றத்தை உருவாக்க நினைக்கும் மாற்றுத்திறனாளியான இவர் யாரையும் எதிர் பார்க்காமல், மக்களிடம் ஹெல்மேட், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.ஒற்றை காலில் தன்னால் பல சாதனைகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் , கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு வந்தவரை இங்குள்ள மக்கள், வரவேற்று ஆதரவு நல்கியதாக தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர்,
மாசு காரணமாக , டெல்லியில் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடும் இந்த பட்டியலில் விரைவில் இணையும் என்றார்.அதை தடுக்க ஒவ்வொருவரும், ஒரு மரமாவது நட வலியுறுத்தி கடந்த 13ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இவரது சைக்கிள் பிரச்சார பயணம் திருநெல்வேலி, தூத்துக்குடி,விருதுநகர், மதுரை,திருப்பூர், வழியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தார்.
நாள் ஒன்றுக்கு 60 கி.மீட்டர் தூரம் பயணிப்பதாகவும், ஈரோடு,சேலம் வழியாக ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தனது விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது கோரிக்கையை அளிக்க இருப்பதாக கூறினார்.15 வயதில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது வலது காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், பின்னர் பலர் ஏளனமாக, பேசியதால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒற்றை காலில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்ததாக தெரிவித்தார்.2008ம் ஆண்டு சிவகங்கையில் இருந்து சென்னை வரை சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் 2013ல் ஹெல்மேட்டின் அவசியத்தை வலியுறுத்தி, வாகன் ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை, சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் செய்துள்ளார்.ஒற்றை காலில் சைக்கிள் ஒட்டுவது பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், மனம் தளராமல் சூழல் பாதிப்பு குறித்து, தன்னை பற்றிய கவலை இல்லாமல், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மணிகண்டனுக்கு சீக்கிரம் அரசு வேலை கொடுத்து உதவினால். அவரது விழிப்புணர்வு பிரச்சாரம் விரிவடைய வாய்ப்பாக இருக்கும்.