March 1, 2019 தண்டோரா குழு
ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடி பின்னால் நிற்கிறது, தமிழ்நாடும் அவர் பின்னால் நிற்கும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
மத்திய அரசின் சார்பில் முடிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசை வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
கற்றவர்கள் நிறைந்த மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. தேங்காய்பட்டினத்தில் மீன்பிடிதுறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது ரூ.25 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் 23 சிறுபாலங்களும் கட்டப்பட்டு வருகிறது.நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முக்கடல் மட்டுமல்ல மூன்று மதங்களும் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி திகழ்கிறது என்றார்.
மேலும், அண்டை நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல், நரசிம்ம அவதாரம் எடுத்தது போல், ராணுவ நடவடிக்கை எடுத்து நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை வதம் செய்ததை பார்த்து, பிரதமருக்கு நாடு முழுவதும் பாராட்டு கிடைக்கிறது. பிரதமரின் நடவடிக்கை, இந்தியாவிற்கு எதிராக செயல்படும் நாடுகள், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்ளது. தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி துணிச்சல் நடவடிக்கை எடுத்த பிரதமரை தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடி பின்னால் நிற்கிறது, தமிழ்நாடும் அவர் பின்னால் நிற்கும் என்ற முதல்வர், பயங்கரவாதத்தை வேரறுக்க பிரதமருக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று முதல்வர் பேசினார்.
அதைபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.