October 4, 2018
தண்டோரா குழு
மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர்(எம்.டி) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ)பதவியில் இருந்து சந்தா கோச்சார் இன்று திடீரென ராஜினாமா செய்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. இந்தக் கடன் வழங்கியதற்கு மாறாக, வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், முறைகேடான வழியில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகையையும் பங்குகளையும் பரிமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனம் வாங்கிய கடனில் ஏறக்குறைய இன்னும் ரூ.2800 கோடிக்குமேல் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் , தனது பதவியை தவறாக, சுயலாபத்துக்குப் பயன்படுத்தியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தீபக் கொச்¬சாரி¬டம் சிபிஐ விசா¬ரணை நடத்தியது. மேலும் இதுதொடர்பாக ஆலோசிக்க வங்கியின் இயக்குநர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கொச்சார் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அவருக்குப் பதிலாக சந்தீப் பக் ஷி புதிய எம்டி மற்றும் சிஇஓ வாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2023, அக்டோபர் 3-ம் தேதிவரை 5ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.