March 3, 2018
தண்டோரா குழு
‘சிரியா மண்ணே சிரி’ என்ற தலைப்பில் அந்நாட்டில் நடக்கும் அவலங்கள் பற்றிய கவிதையை வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து அதிபர் ஆசாத் படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நேரடியாக போரில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ரஷ்யா தடுத்து வருகிறது என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
சிரியாவில் நடக்கும் போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் பலரும் அங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே, சிரியா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மழை அறியாத சிரியா மண்ணில் ரத்தத்துளி சொட்டுகிறது. கரும்புகை தற்போது சிரியாவை ஆண்டுவருகிறது. குழந்தைகளைப் பதுங்கு குழியில் வைத்துப் பாதுக்காக்கும் நிலைக்கு தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள், பதுங்குகுழிகளில் வீழ்ந்துள்ளன. ரசாயனத் தாக்குதலால் கழுகுகளைக்கூட விட்டுவைக்கவில்லை. வீடுகள், கான்கிரீட் கல்லறைகளாக மாறியுள்ளன. போரும், மரணமும் எந்த வடிவிலும் அழகில்லை” என்று கூறியுள்ளார்.