November 15, 2019
தண்டோரா குழு
எனது மகளின் மரணத்தில் நிச்சயமாக ஒரு மர்மம் ஒளிந்திருக்கிறது என சந்தேகிப்பதாக ஃபாத்திமா லத்தீஃபின் தந்தை அப்துல் லத்தீஃப் கூறியுள்ளார்.
ஐ.ஐ.டியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஃபாத்திமா லத்தீஃபின் தந்தை அப்துல் லத்தீஃப் காவல்துறை இயக்குநர் திரிப்பாதியை நேரில் சந்தித்து தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டி புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எனது மகள் பாத்திமா அனைத்து தேர்விலும் முதலிடம் பிடிக்கும் அளவிற்கு திறமையான மாணவி. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்விலும் முதலிடம் பிடித்தே அங்கு படிக்கச் சென்றார். ஐ.ஐ.டி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் எனது மகளை தொடர்ந்து துன்புறுத்தியதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு தனது மகள் அலைபேசியில் பதிவு செய்து வைத்த இறுதி வாக்குமூலமே சாட்சி. சுதர்சன் பத்மநாபன் மட்டுமல்லாமல் மேலும் பல ஐ.ஐ.டி நிர்வாகிகளும் எனது மகளின் மரணத்தில் சம்மந்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து தனது மகள் பதிவுசெய்து வைத்துள்ள விரிவான வாக்குமூலத்தை தமிழக காவல்துறை இயக்குநரிடமும் விசாரணை நடத்தும் அதிகாரியிடமும் வழங்கியுள்ளேன்.
ஐ.ஐ.டி யில் சேர்ந்த 4 மாதத்திற்குள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு எனது மகளை தூண்டிய நிகழ்வு என்னவாக இருக்கும் என்பதை தமிழக காவல்துறையினர் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். எனது மகளின் மரணத்தில் நிச்சயமாக ஒரு மர்மம் ஒளிந்திருக்கிறது. குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை கண்டுபிடித்து தமிழக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். எனது மகள் அலைபேசியில் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மரணத்திற்கு காரணமான சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே எனது முதல் வேண்டுகோள். எனது மகளின் தற்கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஐ.ஐ.டி யைச் சேர்ந்த நிர்வாகிகள் மறைத்து விட்டனர். முதல் தகவல் அறிக்கையில் கூட தனது மகளின் கடிதம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வரும், காவல்துறை இயக்குநரும் தமிழக காவல்துறை இயக்குநருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இதில் சம்மந்தப்பட்டோர் நிச்சயம் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதல் மதிப்பெண் பெறும் தனது மகளின் விடைத்தாளில் மதிப்பெண் குறைத்ததை தனது மகள் தட்டிக்கேட்டுள்ளார். அதில் தனது மகளுக்கும் அந்த பேராசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சில பிரச்சனைகள் அரங்கேறியுள்ளது. மரணம் தொடர்பாக விசாரிக்க சி.சி.டி.வி காட்சிகளையோ தூக்கில் தொங்கிய கயிறு தொடர்பான விவரங்களையோ ஐ.ஐ.டி நிர்வாகம் தராமல் மழுப்புவது ஏன்? மகளுக்கு தூக்கில் தொங்க கயிறு எப்படி கிடைத்தது எனவும் கேள்வி எழுப்பினார். இத்தனை திறமைகள் நிறைந்த ஒரு மாணவி இறந்த பின்பும் ஐ.ஐ.டி நிர்வாகமோ அதன் நிர்வாகிகளோ தனக்கும் தனது மனைவிக்கும் அனுதாபத்திற்கு கூட அழைத்து ஆறுதலாக ஒரு வார்த்தை பேசவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.