March 6, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சையான கருத்தை பதிவு செய்துள்ள ஹெச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக மாநகர துணை ஆணையாளரிடம் புகார் அளித்தனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று இன்னும் ஆட்சி கூட ஏற்காத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் லெனின் சிலையை பாஜகவினரால் அகற்றப்பட்டுள்ளது.
இன்று லெனின் சிலையை அகற்றப்பட்டது போல நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் பெரியாரின் சிலைகளையும் அகற்றுவோம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சமூக வளைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையரை சந்தித்து ஹெச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன்
தமிழகத்தில் ஜாதி வெறியை தூண்டி, வன்முறையை ஏற்படுத்தப்பட்டு, ரத்த பூமியாக்க வேண்டும் என்பதற்காகவே வெறிப்பிடித்த சிந்தனையில் ராஜா இது போல் பதிவு செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.பெரியாரின் சிலை மீது ஹெச்.ராஜா துணிவிருந்தால்,ஒரு இடத்திலாவது கை வைத்து பார்க்கட்டும் எனவும் கு.இராமகிருட்டிணன் சவால் விட்டார்.
தமிழக அரசு தந்தை பெரியாரின் மீது மரியாதை வைத்திருந்தால் ஹெச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு உடனடியாக தொடுக்க வேண்டும் எனவும் விரைவில் ஹெச்.ராஜாவை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.மேலும் ஹெச் .ராஜா மன்னிப்பு கேட்கும் வரை அவரை விட மாட்டோம் என்றார்.