December 28, 2019
நியாயம் கேட்டு எங்களையும் வீதியில் இறங்கி போராட வைத்துவிடாதீர்கள் என்று கோவையில் முன்னாள் ராணுவ வீரர் பேட்டியளித்துள்ளார்.
கோவை முன்னாள் ராணுவத்தினர் சங்கம், இந்திய முன்னாள் படைவீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் விதவையர்கள் நல சங்கம் இணைந்து சங்கத்தின் 31வது ஆண்டுவிழா, 1971ம் ஆண்டு போர் விஜய் நிவாஸ் விழா மற்றும் தலைமை சங்க கூட்டமைப்பின் 21ம் ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழாவை கூட்டம் கோவை கோ இந்தியா ஹாலில் இன்று நடத்தின.
அப்போது முன்னாள் ராணுவ வீரரும், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவருமான சிவராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ,
எங்கள் சங்கம் சார்பில் கோவையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து குடும்பத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து உள்ளோம்.அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக போராட்டங்களை கிளப்பி விட வேண்டாம் என்று இராணுவத் தளபதி பிபின் ராவத் கூறிய கருத்து தற்போது பேசு பொருளாக உள்ளது. ராணுவ வீரர்களுக்கும் கருத்துக் கூறும் உரிமை உண்டு. உயிரை விடுவது மட்டும் ராணுவ வீரர்களின் வேலை அல்ல. அவதூறு பரப்புவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். இதற்காக முன்னாள் ராணுவத்தினரை வீதியில் இறங்கி போராட வைத்து விடாதீர்கள். நாங்கள் இந்தியாவில் நல்லெண்ணத்தை வளர்க்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்கள் ராமச்சந்திரன், காந்தி, அரிமா சங்கத்தின் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.