January 13, 2020
உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தர கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் உள்ளூர் உழவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு கடைகள் இல்லை என்றும் மலை மாவட்டங்களான நீலகிரி, ஊட்டி, போன்ற இடங்களில் இருந்து வரும் காய்கறிகளை விற்பதற்கு உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது என்றும் எனவே உள்ளூர் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி விற்பதற்கு ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி,
கோவையில் தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு சூலூர் போன்ற பல பகுதிகளில் விவசாயம் செய்து கோஸ் பீட்ரூட் போன்ற காய்கறிகளை விளைவித்து வருவதாக வும் ஆனால் அதை உழவர் சந்தைகளில் விற்பதற்கு இடம் தரப்படவில்லை என்று தெரிவித்தார். இது உள்ளூர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயலாக தெரிகிறது என்று கூறினார் எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக கோவையில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கும் இடம் ஒதுக்கி தரப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.