November 26, 2019
உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல ஆயத்த கூட்டம் , தேர்தல் ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு,திருப்பூர், நீலகிரி , கோவை மாவட்டங்களில் இருந்து ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்ட இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
ஏற்கனவே தேர்தல் ஆணையர் தலைமையில் முதல் கட்ட ஆய்வு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகள் அமுல்படுத்துவது, பாதுகாப்பு பணிகள், வாக்கு பதிவு மற்றும் எண்ணிக்கை தொடர்பாக , அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல், வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல், வாக்கு சாவடி மையங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.