December 6, 2019 தண்டோரா குழு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் அமர்வு முன் கடும் வாதம் நடந்த நிலையில், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஊராக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்தது. இதன் மீது நேற்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பளித்தது. அதில், ஒன்பது மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்,வார்டு வரையறை முடிவடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணைக்குத் தடை விதிப்பதாகவும், எனவே, புதிய அரசாணை வெளியிட்டு தேர்தலை நடத்துமாறும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.