June 1, 2025
தண்டோரா குழு
2025 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் சைக்கிள் பேரணி உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று கோவை பந்தய சாலை பகுதியில் நடைபெற்றது.
முதலாவதாக இந்த சைக்கிள் பேரணியில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டு சாரதாம்பாள் திருக்கோயிலில் துவங்கி பந்தய சாலையை சுற்றி வந்து, மீண்டும் சாரதாம்பாள் கோயில் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இந்தப் பேரணியை எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கந்தசாமி இணைந்து கொடி அசைந்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், சி.வி.இராம்குமார், தலைமை செயல் அதிகாரி;. D.மகேஷ்குமார், தலைமை நிர்வாக அதிகாரி, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை; டாக்டர் தீபானந்தன், முதல்வர்; டாக்டர் அருண் கே. சைமன், துறை தலைவர், பொது சுகாதார பல் மருத்துவம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் கல்லூரியின் மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பங்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் மாணவர்கள் சார்பில் மைம், விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் விநியோகித்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்தன. இது ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களுடன் பேசிய டாக்டர் அருண் கே சைமன், புகையிலை உட்கொள்வது உலக அளவில் பல்வேறு உடல் பாதிப்புகளை மக்கள் சந்திக்க முக்கிய காரணமாக உள்ளது .மேலும் ஓரிடத்தில் ஒருவர் சிகரெட் அல்லது பீடியை புகைக்கும் போது, அந்தப் புகை அருகே நிற்பவருக்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது என கூறினார்.
புகையிலை பயன்படுத்தும் சிலர் சிகரெட் அல்லது பீடியை பயன்படுத்தினால் மட்டுமே ஆபத்து எனவும், புகை இல்லாத புகையிலை பொருட்களை பயன்படுத்தும் போது பாதிப்பு ஏற்படுத்தாது என்று எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறானது. புகைப்பிடிப்பதை போலே இதுவும் பாதிப்பை ஏற்படுத்தும். புகையிலையின் அனைத்து வடிவங்களுமே தீங்கானது. எனவே நம் சமுதாயத்தில் மக்கள் எந்த வகை புகையிலையையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனக்கு கூறினார்.