June 9, 2018
தண்டோரா குழு
ஜெர்மனியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கேட்டு மத்திய, மாநில அரசுகளின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்த வீராங்கனைக்கு உபி முதல்வர் உதவியுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை கடிதம் எழுதி உள்ளார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி, ஜூன் 22ம் தேதி முதல் நடைபெற உள்ளது.இந்த தொடரில் பங்கேற்க, இந்தியா சார்பில், உத்தரபிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த பிரியா சிங் என்ற இளம்பெண் தகுதி பெற்றுள்ளார். ஆனால், நிதிப் பிரச்சனை காரணமாக அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.
இது குறித்து பிரியா சிங் கூறுகையில்,
நான் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன். ஆனால், அதற்கு ரூ.3-ரூ.4 லட்சம் வரை செலவாகும். என் தந்தை கூலித் தொழிலாளி. எனினும் இயன்ற வரை முயற்சி செய்தார். ஆனால், அவரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, நிதி உதவி கேட்டு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். முன்னதாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உதவி கேட்டு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பதற்காக இரண்டு முறை சென்றேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இத்தகவல் வெளியானதும் உ.பி., முதல்வர் யோகி அப்பெண்ணுக்கு 4.5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,
பிரியா சிங் கடிதம் கிடைத்தவுடன், உடனடியாக மாநில அரசு சார்பாக பிரியா சிங்கிற்கு ரூ.4.5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் அவரது பயணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி மீரட் மாவட்ட நீதவான் என்னிடம் கேட்டுக் கொண்டார் என்று கூறியுள்ளார்.