February 24, 2018
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த பெண் ஒருவரால் தனக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாகவும்,தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, திருப்பூரில் சட்ட மையம் நடத்தி வரும் ராஜ் என்பவர் மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
திருப்பூரை சேர்ந்த மோகன்குமார் மற்றும் அவரது தோழி கார்த்திகா பிரியதர்ஷினி ஆகிய இருவரும் சட்ட ஆலோசனைக்காக திருப்பூரில் செயல்பட்டு வரும் சட்ட ஆலோசனை மையத்தை சேர்ந்த ராஜ் என்பவரிடம் அறிமுகமாகி உள்ளனர்.
பின்னர் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சந்திரகலா என்பவருக்கும், கார்த்திகா பிரியதர்ஷினிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை சமரசம் செய்ய ராஜ், சந்திரகலாவை அணுகிய போது பிரியதர்ஷினியை பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் பிரியதர்ஷினி மற்றும் மோகன்குமார் இணைந்து பல நபர்களை ஏமாற்றி சொத்து பத்திரங்களை வாங்கி அவற்றிற்கு போலி ஆவணங்களை தயார் செய்து திருப்பூரில் உள்ள பிரபல வங்கிகளில் அடகு வைத்து லட்ச கணக்கில் மோசடி செய்து வந்துள்ளனர்.அதே போல் பலரிடம் வீட்டுமனை வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில்,இவர்களது மோசடி முழுவதும் தனக்கு தெரியும் என்பதால் கூலிப்படை மூலம் தனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் எனவே தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி திருப்பூரை சேர்ந்த ராஜ் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மேலும்,கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை தாக்க முற்பட்ட சிலர் தன் காரை சேதப்படுத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ள ராஜ்,இதேபோல் கார்த்திகா பிரியதர்ஷினி குறித்த மோசடிகளை வெளிக்கொண்டு வந்த சஞ்சய் ரெட்டி என்பவரை அடியாட்கள் கொண்டு தாக்கியதாகவும் இவற்றை கருத்தில் கொண்டு அவர்களிடமிருந்து தனக்கு உயிருக்கும், உடமைக்கும் உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் ராஜுவிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.