June 18, 2018
தண்டோரா குழு
உதகை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி வழங்க வந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் வெளியேறினார்.
கடந்த 14ம் தேதி உதகை அருகே அரசு பேருந்து பள்ளத்தில் விழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 பேரை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,ஊட்டி எம்.பி.அர்ஜூனன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கினர்.
அதில்,லேசான காயமடைந்தவர்களான பாலச்சந்தர்,மாரிமுத்து,சுகன்யா ஆகிய 3 பேருக்கு தலா ரூ.25,000 பலத்த காயமடைந்தவர்களான நமச்சியவாயம்,கணேசன்,ராணி,நடராஜ்,ஆனந்தன் ஆகிய 5 பேருக்கு ரூ. 2 லட்சமும்,தண்டு வடம் பாதிக்கப்பட்ட சாந்தி என்பவருக்கு ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சத்து 75 ஆயிரத்திற்கு நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது.
இதனையடுத்து,இன்று உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரண நிதி தவிர போக்குவரத்து கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ.2.50 லட்சம் என 7 நபருக்கு தலா 5 லட்சம் ரூபாய் என ரூ.35 லட்சம் 9 பேருக்கு காப்பீடு மூலம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவக கூட்டரங்கில் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கரிடம், பத்திரிக்கையாளர்கள் மலை மாவட்டமான நீலகிரியில் பழுதான பேருந்துகள் தான் இயக்கப்பட்டு வருகிறது என கேள்வி கேட்ட நிலையில்,அதை மறுத்த அமைச்சர் தரமான பேருந்துகள் தான் உள்ளது என கூறினார்.இதனால் பத்திரிகையாளர்களுக்கும் அமைச்சருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அமைச்சர் கோபத்துடன் அரங்கை விட்டு வெளியேறினார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் உட்பட உள்ளூர் எம்.பி ஆகியோர் அவரை சமாதானம் செய்து மீண்டும் அரங்கிற்கு கூட்டி வந்தனர்.
இதனையடுத்து பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில்,விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான காப்பீடு தொகை உடனடியாக வழங்குவது இதுவே முதல் முறை என்றும்,நீலகிரிக்கு தற்போது 39 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாகவும்,இதில் முதல் கட்டமாக 13 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,தமிழகம் முழுவதும் 5000 புதிய பேருந்துகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது 2000 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
தனியார் பேருந்துகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்துகள் கர்நாடக மாநிலத்தில் கட்டமைப்பு செய்து வாங்க உள்ளதாக கூறினார்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பேருந்துகளை பற்றியும் பணிமனைகள் பிரச்னையை குறித்த பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இதற்காக அலுவலர்களை நியமித்து அதிவிரைவில் இங்கு சரியான ஆய்வுகளை மேற்கொண்டு சீர் செய்யப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் தரமில்லாத பேருந்துகள் இல்லை என்றும்,போக்குவரத்து துறையின் நடவடிக்கையால் சாலை விபத்துகளும்,உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டவர்,சாலை பாதுகாப்பிற்கு 65 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 18 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில்,6 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.