December 24, 2019
அமேசான், நெட்பிளிக்ஸ் 100 நாட்கள் வரை படங்களை வெளியிடக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சத்திய சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கோவை ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்கள் தற்போது சந்தித்து வரும் நஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து மீள்வது குறித்தும் தமிழக அரசிடம் வைக்க கூடிய கோரிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும். பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம். உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.