December 6, 2019
அரசு பேருந்து மோதி பெண் உயிரிழந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் 5 அரசு பேருந்துகள் ஜப்தி செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கந்தப் பள்ளியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பரிமளா பிரியா (31) கடந்த 2015ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில், பரிமளா பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயத்துடன் உயிர்தப்பினார்.உரிய இழப்பீடு கேட்டு பரிமளா பிரியாவின் கணவர் மணிகண்டன் கோவை மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 72 லட்சத்து 40 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கடந்த 2018ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படாததால், தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்று மனுவை விசாரித்த மூன்றாவது கூடுதல் நீதிமன்றம், இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து 94 லட்சம் ரூபாய் வழங்கும் வரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 5 பேருந்துகள் ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 5, 10 சி, எஸ் 17 ஆகிய மூன்று பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். மீதமுள்ள பேருந்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.