November 9, 2020
தண்டோரா குழு
இரைப்பை குடல் ரத்தக்கசிவுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் சேவை ஜெம் மருத்துவமனையில் இன்று துவங்கப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெம் மருத்துவமனையானது இரைப்பை குடலில் ரத்தக்கசிவுக்கு 24 மணி நேரமும் அவசர சிகிச்சை அளிக்கும் சேவையை இன்று துவங்கி உள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேல் மருத்துவர்கள் ஸ்ரீதர் மற்றும் ரகுநாத் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்
அப்போது அவர்கள் கூறியதாவது:
இரைப்பை குடலில் ரத்தப்போக்கு என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். பல நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்படுகிறது. ஆனால் கோவையில் முதல்முறையாக 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக அணி ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ரத்தப் போக்கு என்பது ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும். இதனால் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தி தன்மை குறைந்து, உடலில் பிரச்சனை ஏற்பட்டு ரத்தப்போக்கு அதிகரிக்கிறது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மலம் கழிக்கும் போதோ அல்லது இருமலின் போது இரத்தம் வெளிப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.