January 7, 2019 தண்டோரா குழு
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் police e eye என்ற ஆன்ட்ராய்டு செயலியை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இன்று துவக்கி வைத்தார்.இதன் மூலம் விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் police e eye என்ற செயலி இன்று காவல் ஆணையர் சுமித்சரண் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையர் சுமித்சரண்,
இந்த செயலி மூலம் போக்குவரத்து விதிமுறை மீறில்களை காவல்துறைக்கு பொது மக்களே தெரிவிக்கமுடியும். தலைகவசமின்றி வாகனம் ஓட்டுதல் , இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தல், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு விதிமுறை மீறல்களை இந்த செயலி மூலம் புகைபடம் எடுத்து பொதுமக்களே காவல் துறைக்கு அனுப்ப முடியும். அந்த புகைபடங்கள் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் இந்த செயலி மூலம் பதிவாகும். இதன் மூலம் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் கமிஷ்னர் சுமித்சரண் தெரிவித்தார்.
மேலும், இந்த செயலி சோதனை அடிப்படையில் நடைமுறை செய்து பார்க்கப்பட்டு 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான காவலர்கள் இல்லாத நிலையில் இந்த செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருப்பதாகவும் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ்கண்ணண் தெரிவித்தார். விதிமுறை மீறிய 30 அரசு பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதே போல அரசு துறை வாகனங்களும் விதிமீறினால் அந்த துறையின் தலைமை அதிகாரிகளுக்கு விதிமீறல் குறித்த தகவல் சொல்லப்படுவதுடன் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆணையர் ராஜ்கண்ணா தெரிவித்தார்.
இந்த செயலியை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் நிலையில் போக்குவரத்து விதிமீறல் கட்டுப்படுத்தப்படும் எனவும் வாகன ஒட்டிகளுக்கும் தாங்கள் கண்காணிக்கப்படுகின்றோம் என்ற அச்ச உணர்வு ஏற்படும் எனவும் அதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுக்குள் வரும் எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.